
கடந்த வாரமும், இந்த வாரமும் நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை. முதல் சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரின் அதீத தாக்குதலால் பலியான மூன்று மாணவர்கள். இரண்டாவது சம்பவம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த, பத்திரிக்கையாளரின் பார்வையில் ஸ்டாலின் என்ற நூல் வெளியீட்டு விழா. மூன்றாவது சம்பவம், அருள்மிகு ஸ்ரீ நித்யானந்த பரமஹம்ச ஸ்வாமிகள் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.

மூன்று சம்பவங்களும், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால், மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நிறைந்த அரசியல் பின்னணி கொண்டது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து, தமிழகத்திலேயே முதல் போராட்டம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தான் வெடித்தது. அப்போராட்டத்தை முன்னெடுத்த, உதயக்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அவர் உடலையே அவர் பெற்றோர்கள் தங்கள் மகன் இல்லை என்று அடையாளம் கூறியதும் வரலாறு.
அந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கடந்த வாரம் கவுதம் குமார் என்ற மாணவர், சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவருக்கு, சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை, சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் அம்மாணவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தின் ஆணைப்படி, செயல்பட்ட கருணாநிதி அரசின் காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், சுமித் குமார், ஆசிஷ் ரஞ்சன் குமார், சர்பராஸ் என்ற மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டனர். இந்தப் பிரச்சினை பூதாகரமான மாணவர் பிரச்சினையாக உருவாகும் தகுதி படைத்தது.

மாணவர்கள் சடலம் எடுத்து வரப்படுகிறது
கொல்லப்பட்ட மாணவர்கள், வட இந்திய மாணவர்கள் ஆதலால், உடனடியாக பெரும் பிரச்சினை கிளம்பவில்லை. ஆனால், வட இந்திய மாணவர்கள், மாணவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரு மாணவர்கள் சடலம் ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது
ஆனால் திட்டமிட்டது போல, இந்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தன. நேற்று இரண்டு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதும், கடலூல் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த மாணவர்களின் கொலை, தமிழகமெங்கும் பரவும் சூழ்நிலை உருவானது.
அடுத்து இரண்டாவது சம்பவம். நேற்று சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினைப் பற்றி, “ஸ்டாலின். மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில், தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சோந்தாலியா, பெரியார் மடத் தலைவர் வீரமணி, திமுக நிலைய வித்வான் கமலஹாசன், குமுதம் குழும தலைவர் பா.வரதராஜன், தினமலர் குழும உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜீ, இந்து நாளிதழின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்.ராம், விகடன் குழும முதலாளி பா.சீனிவாசன், தினத்தந்தி, மாலைச்சுடர் முதலாளி பாலசுப்ரமணிய ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் செய்தி என்னவென்றால், தமிழக அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், பத்திரிக்கையாளர்களும், அதன் முதலாளிகளும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழாவில் பங்கு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என்பது, இயல்பான ஒரு நிகழ்வு அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
உண்மையில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைப்பது நோக்கமென்றால், ஜெயா டிவி எடிட்டர், நமது எம்ஜிஆர், மாலைச்சுடர், மக்கள் குரல், ந்யூஸ் டுடே ஆகிய பத்திரிக்கையாளர்களை வாழ்த்துச் சொல்ல அழைக்க வேண்டியதுதானே ? ஏன் அழைக்கவில்லை.
ஏன் அழைக்கவில்லை என்றால், திமுகவின் பிடிக்குள் வந்து, திமுகவின் துதிபாடிகளாக ஆன பத்திரிக்கைகள் மட்டுமே இவ்விழாவிற்கு அழைக்கப் பட்டன. மேற்கூறிய பத்திரிக்கைகள் எதிலுமே திமுக அரசுக்கு எதிராக பெரிதாக எந்த செய்திகளும் வருவதில்லை. இந்தப் பத்திரிக்கைகளைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கைகளும் பிரபலமான மக்களைச் சென்றடையும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் சாபக் கேடு.

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும், உழைப்பால் உயர்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே, தங்கள் தகப்பனாரின் உழைப்பில் விளைந்த சொத்துக்களை இன்று அனுபவிக்கும் கூட்டத்தினர்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் வந்துவிட்டால், பிறகு, நான்காவது தூணுக்கு என்ன வேலை ? நான்காவது தூணுக்கு வேலை இல்லாமல் செய்வதுதான் கருணாநிதியின் வேலை.
பெரும்பாலான பத்திரிக்கைகளை அழைத்து, உங்களுக்கு, பரபரப்பான செய்திகளால் பத்திரிக்கை விற்பனை அதிகரித்தால் உங்களுக்கு என்ன வருமானம் வருமோ, அந்த வருமானத்தை விளம்பரத்தால் உறுதி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, அதைச் செயல்படுத்தியும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் மீறி, தலைமைச் செயலகம் திறக்க இருக்கும் இந்த நேரத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கொலை பற்றிய செய்திகள் வெளிவந்தால் ? அது சிக்கலை உருவாக்கும் அல்லவா ?
அங்குதான் மூன்றாவது சம்பவம் வருகிறது. சுவாமி நித்யானந்தாவின் படம் நேற்று இரவு அனைத்து தமிழ் காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டே ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. இரவு 8.30 மணிக்கு முதன் முறையாக காட்சி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர், உடனடியாக நித்யானந்தாவின் படத்தை கிழித்தும், எரித்தும், போராட்டம் நடத்தியதை, சன் டிவி விரிவாக ஒளிபரப்பியது.
இதற்கு விரிவாக கவரேஜ் கொடுத்த, சன் டிவி, தலித்துகள், இன்னும், ஆலயத்தினுள் நுழைய வராமல் தடுக்கப் படுவதையும், தலித் தெருக்களில் கடவுள் தேரை கொண்டு வர, நீதிமன்றம் வர வேண்டிய அவல நிலை இருப்பதையும் இந்த இந்து மக்கள் கட்சியும், இதர இந்துக் கட்சிகளும் ஏன் கண்டிக்கவோ, போராடவோ தவறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப மறுக்கிறது.
சுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா ? எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா ? நீங்களாக நித்யானந்தாவுக்கு, செக்ஸ் உணர்வு கிடையாது என்று கற்பனை செய்து கொண்டு, இப்படி ஒரு வீடியோ வெளியானதும், நித்யானந்தா நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்று கூறுகிறீர்களே … இது எந்த விதத்தில் நியாயம் ?
நித்யானந்தா கைது செய்யப் பட வேண்டும் என்று இன்று போராட்டம் நடத்தும் இந்து மக்கள் கட்சியினர் இது நடிகை ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ? யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் ரஞ்சிதா அல்லவா புகார் கொடுக்க வேண்டும் ?
இரண்டு வயது வந்த நபர்கள், தன் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வதால் சமுதாயத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது ?
மேலும், இந்த வீடியோ எடுக்கப் பட்ட ஆண்டு மிகவும் முந்தையது என்று தோன்றுகிறது. வீடியோவில், ரஞ்சிதா, தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்கையில் இருந்தது போல இருக்கிறார். இப்போதைய ரஞ்சிதாவிற்கும், வீடியோவில் தென்படும் ரஞ்சிதாவிற்கும் நிறைய வயது மற்றும் தோற்ற வேறுபாடு தெரிகிறது.

பழைய ரஞ்சிதா

தற்போதைய ரஞ்சிதா
எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
அதற்கேற்றார்போல, இன்று காலை முதல், டீக்கடை, பத்திரிக்கை கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், என்று மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் நித்யானந்தாவைப் பற்றித்தான் பேச்சு.
இது கருணாநிதியின் திட்டமாக இருந்தால், அவர் மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டார்.
கருணாநிதியின் நயவஞ்சகத்தையும், சூதையும் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய ஆச்சர்யமாகத் தோன்றாது.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், மக்களும், சோரம் போன பத்திரிக்கைகளும் இருக்கையில், எத்தனை கதவுகள் திறந்தாலும், காற்று வரப்போவதில்லை.
சவுக்கு












