பாஸு. சவுக்கு ஜாபர் சேட்ட பத்தி எழுதி, ரொம்ப ரசா பாசமா ஆயிப் போச்சு. நடந்த எல்லாத்தையும், இணையத்துல விரிவாவே பதிவு பண்ணியிருக்காங்க. இனிமே ஜாபர் சேட்டோட மோதி, ஜெயிக்க முடியும்ணு தோணலை. அதனால, சவுக்கு ஜாபர் சேட்டோட சமாதானமா போயிடலாம்ணு முடிவு பண்ணிடுச்சு.
அதனால, இதோ ஜாபர் சேட் லாவணி….

சார், இந்த ஜாபர் சேட் நல்லவர்னா நல்லவர்… அநியாயத்துக்கு நல்லவர் சார். கண்ட பயக எல்லாம் நாக்கு மேல பல்லப் போட்டு, நம்ம சேட் அண்ணாச்சியப் பத்தி கண்ட மேனிக்கு பேசுறானுவ… இவரு எப்பேர்பட்ட ஆளு…. எவ்வளோ நேர்மையானவரு… இவரப் போயி…. நெனச்சாலே கண்ணு கலங்குது சார்.
நம்ம ஜாபர் சேட் மதுரைக் காரரு சார். எம்பில் படிச்சுருக்காரு. தமிழ், இந்தி, மலையாளம் (ஷகீலா படம் பாப்பீங்களா சார்), ப்ரென்ச் மொழியெல்லாம் தெரியும் சார். 1986ல ஐபிஎஸ் பாஸ் பண்ணி தமிழ்நாட்டுக்கு வந்தார்.
இந்த ரெவிடிப்பசங்க இருக்காங்களே… இவங்களால மக்களுக்கு எவ்வளவு கஷ்டம் சார் ? அதனால, நம்ம சேட்டு மாமா என்ன பண்றாருன்னா இந்த மாதிரி ரெவிடிப் பசங்கள, என்கவுன்ட்டர்னு போட்டுத் தள்ளுறதுல நம்ம சேட்டு எக்ஸ்பர்ட்டு சார்.
இவரால அல்லது இவர் உத்தரவால சுட்டுக் கொல்லப் பட்ட ரெவிடிப் பசங்க எத்தனை பேரு தெரியுமா சார் ?
1) வடக்கு குண்டல் கிராமம், கன்னியாக்குமரி மாவட்டத்தைச்
சேர்ந்த
ராஜன் என்கிற உருண்டை ராஜன்
2) வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்த நாகூர் மீரான்
3) திருவேற்காட்டைச் சேர்ந்த செந்தில் குமார்
4) சைதாப்பேட்டையைச் சேர்ந்த குமார் என்கிற பங்க் குமார்
5) வியாசர்பாடியைச் சேர்ந்த வெள்ளை ரவி
6) வியாசர்பாடியைச் சேர்ந்த குணா
7) திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முட்டை ரவி
8) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குற கிருஷ்ணன்
9) சூணாம்பேடு அஷோக்
10) மதுரையைச் சேர்ந்த மாரி என்கிற டோரி மாரி
11) நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மணல்மேடு சங்கர்
12) கும்பகோணத்தைச் சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி
13) தஞ்சாவூரைச் சேர்ந்த பாம் பாலாஜி
14) தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார்
15) தூத்துக்குடியைச் சேர்ந்த சுடலைமணி
16) மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நவீன்பிரசாத்
17) நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த கோபி
18) தேனி, கீழகூடலூரைச் சேர்ந்த தெய்வேந்திரன்
19) காரைக்குடியைச் சேர்ந்த சண்முகம்
20) அரக்கோணத்தைச் சேர்ந்த தனசேகரன்.
21) விருதுநகரைச் சேர்ந்த சந்திரமூர்த்தி
22) திருவாரூரைச் சேர்ந்த குரங்கு செந்தில்
23) திண்டுக்கல் பாண்டி
24) கூடுவாஞ்சேரி வேலு
25) கொற நடராஜன்
இந்த இருபத்தஞ்சு பேரையும், ஜெயில்ல அடச்சு வைச்சு, அவங்களுக்கு சோறு போட்டா (சவுக்குக்கு போட்ட மாதிரி), அரசாங்கத்துக்கு என்ன செலவுன்னு யோசிச்சு பாருங்க சார் ?
மக்களோட வரிப் பணம் இந்த மாதிரி வீணாகச் செலவாகலாமா ? அதனாலதான் நம்ப சேட்டு மாமா என்ன பண்றார். இவங்க அத்தனை பேரையும் “என்கவுன்ட்டர்“ ன்ற பேருல காலி பண்றாரு.
என்கவுண்ட்டர்னா ஏதோ சின்னக் கவுண்டர் மாதிரி நெனச்சுடாதீங்க. “வழக்கமான சோதனைப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே வந்த ஒரு வண்டியை நிறுத்த உத்தரவிட்டும், அதை நிறுத்தாமல் சென்றதால், அதை நிறுத்த முயற்சி செய்கையில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நாட்டு வெடிகுண்டுகள் வீசியோ, அல்லது அரிவாளால் வெட்டியோ தாக்க முயற்சித்த ரெவிடிப் பயல்களை, தற்காப்புக்காக இரண்டு ரவுண்டுகள் காவல்துறையினர் சுட்டதில் குண்டுக் காயம் பட்டது.
அவசரமாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. “ இதுதான் சார் என்கவுண்ட்டர்.
இந்த மாதிரி என்கவுண்ட்டர் பண்ணி நம்ப சேட்டு மாமா எவ்வளவு வரிப்பணத்த மிச்சம் பண்ணிருப்பார் ? கணக்குலயே வராது சார். அதுலயும், இந்த மாதிரி ரெவிடிப் பசங்க, கன்னா பின்னான்னு திண்ணுவாங்களாம் சார். எவ்வளவு அரசுப் பணத்த மிச்சம் பண்ணிருக்கார் பாருங்க ?
இந்த மாதிரி மிச்சம் பண்ண பணம் அவருக்குத் தானே சார் சொந்தம் ? அதனால என்ன பண்றார், மாசா மாசம் அரசாங்கத்தோட ரகசிய நிதியிலேர்ந்து கொஞ்சமா ஒரே ஒரு லட்ச ரூபா எடுத்துகறார் சார்.
இது தப்பா ? எவ்ளோ பெரிய ஆபீசர் அவரு…. ஒரே ஒரு லட்சம் ரகசிய நிதிலேர்ந்து எடுத்துக்கறது அவ்ளோ பெரிய தப்பா சார் … (ஆமா ஜாபர் சார்… மாசம் ஒரு லட்ச ரூபாய் வீட்டு செலவுக்குன்னா, மத்த செலவுக்கெல்லாம் என்னா சார் பண்றீங்க. பாவம் சார் நீங்க)
இதே மாதிரிதான் சார்…. அவரோட ஆபீஸ் ரூம புதுப்பிக்கறதுக்காக 2007ல் வெறும் 5 லட்ச ரூபாய ரகசிய நிதிலேர்ந்து எடுத்து செலவு பண்ணார் சார். இது ஒரு தப்பா ?
2007ல் ஆபீஸ் ரூம புதுப்பிச்சா அது என்ன அப்படியேவா இருக்கப் போகுது ? பழசாகாது ? அது மாதிரி பழசானதுனால, மறுபடியும் புதுப்பிக்கறதுக்காக 2009ல் மீண்டும் ஒரு 5 லட்ச ரூபா செலவு பண்ணார் சார்.
இதப் போயி கண்ட நாயெல்லாம் கண்டபடியா பேசுதுங்க சார். இப்போ, ஆபீஸ் ரூம புதுப்பிச்சா அப்போ சேட்டு மாமா எங்க உக்கார்ந்து வேல செய்வாரு. அவரு அன்றாடம் பாக்குற ஒட்டுக் கேக்கற வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகள் கெட்டுப் போயிடும் இல்லையா ?
அதனால கடமை உணர்ச்சியோட சேட்டு அண்ணாச்சி என்ன பண்றாரு, அவரு 15 நாள் வெளிநாடு போறப்போ, இந்த புதுப்பிக்கற வேலையெல்லாம் முடிச்சுட சொன்னாரு.
அவரு எதுக்கு வெளிநாடு போனாருன்னு, சில அதிகப்பிரசங்கிகள் கேட்கும்.
அவரும், நம்ப ஜிவால் அண்ணாச்சியும், அதாங்க, தலையில ஆன்டென்னா வச்சுருக்கரவரு, அமெரிக்கா போயி, புதுசா ஒட்டுக் கேக்குற மெஷின் எதுனா வந்துருக்கான்னு விசாரிக்க போனாங்க. அப்போதான் இந்த புதுப்பிக்கற வேலை நடந்துச்சு.
அப்பவும் சில நாதாரிங்க, அரசு கட்டிடத்த புதுப்பிக்கறதுக்குத்தான், பொதுப் பணித்துறை இருக்குதே, எதுக்காக ரகசிய நிதியை எடுக்கணும்னு கேக்கும்.
பொதுப்பணித்துறையிடம் லெட்டர் அனுப்பி, அவங்க புதுப்பிக்கற வரைக்கும், எத்தனை நாள் சார் வெயிட் பண்றது. அது மட்டும் இல்லாம, இந்த ரகசிய நிதி இருக்கும் போது, என்னாத்துக்கு, கண்ட பயங்க கிட்டயெல்லாம் கேக்கணும்கறேன்….
சேட்டு அண்ணாச்சி, நீங்க கவலைப் படாதீங்க அண்ணாச்சி. கண்ட பயங்க கண்ட படிதான் பேசுவாங்க. நான் உங்க பெருமையெல்லாம், ஒண்ணு ஒண்ணா எடுத்து விட்றேன் அண்ணாச்சி.
சேட்டு மாமாவ பாக்க நாலு பேர் ஆபீசுக்கு வர மாட்டாங்க ? அந்த மாதிரி வர்றவங்கள, நல்லா உபசரிச்சு அனுப்பினாத்தானே சார் மரியாதை ? அதனால, அதே ரகசிய நிதியிலிருந்து, 98,000 ரூபாய்க்கு, ஒரு புது சோபா செட்ட, போன மாசம் வாங்கிப் போட்டுருக்கார் சார். அது என்ன அவருக்காகவா போட்டுருக்கார் ? நாலு சாதி சனம் வந்தா சொகுசா உக்காந்து போக வேணாம் ?
அப்புறம், ஒரே ஒரு லட்ச ரூபா செலவு பண்ணி இந்த வருஷம் மார்சுல, பாத்ரூம புதுப்பிச்சுருக்கார் சார். சுத்தம் சோறு போடும் இல்லையா ?
அதுக்காகத் தானே சார் இவ்வளவு ரூபாய, ரகசிய நிதியிலேர்ந்து எடுத்து செலவு பண்ணிருக்கார் ? (ஆமா ஜாபர் சார், தங்கத் தட்டுல போனாலும், ஒன்னுக்கு ஒன்னுக்குதானே சார் ? இதுக்கா ஒரு லட்ச ரூபா ? இது கொஞ்சம் ஓவர்தான் சார்)
இது எல்லாத்தையும் விட, நம்ப சேட்டு மாமாவோட சமூக நோக்கத்தையும், தயாள குணத்தையும் பத்தி சொல்லியே ஆகணும் சார். சொன்னா, சவுக்குக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம் போகாது.
ஏற்கனவே, சவுக்கு ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் பதிவில், நம்ப சேட்டு மாமா வீடு எல்லாம் கட்டி சந்தோஷமா இருக்க விஷயத்த சொல்லுச்சு. அதப் பத்தி விசாரிச்சா, நம்ப சேட்டு மாமாவோட தயாள குணம் பத்தி தகவல் வந்துக்கிட்டே இருக்கு சார்.
அரசோட விருப்புரிமை ஒதுக்கீடு கோட்டாவில, நம்ப சேட்டு மாமாவோட பொண்ணுக்கு ஒரு வீட்டு மனை ஒதுக்கீடு பண்ணதையும், அதை அவரு சம்சாரம் பேருக்கு மாத்துன விஷயத்தையும் சவுக்கு சொல்லுச்சு இல்ல ?
அந்த வீட்டு மனை மொத மொத நம்ப சேட்டு மாமா பேருக்குத்தான் சார் ஒதுக்கீடு செய்யப் பட்டுருக்கு. அவரு அப்பழுக்கற்ற அரசு ஊழியராம். இதற்கான அரசாணை எண் 429 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் (வீ.வ.5 (1)) துறை, நொள் 23.04.2008ன் படி மனை எண் 540 திருவான்மியூருல கொடுத்துருக்காங்க.
நான் ஏற்கனவே சொன்னேன்ல .. … தயாள குணம்னு. அந்த தயாள குணத்தின் படி, தன் பேருக்கு கொடுத்த வீட்டு மனையை ரத்து செஞ்சுட்டார் சார். ரத்து செஞ்சுட்டு, தாராள மனசோட, ஜெ.ஜெனிபர் ன்னு அவரோட மகளுக்கு விட்டுக் கொடுத்துட்டார் சார். (எவ்ளோ தாராள மனசு).
தாய் எட்டடின்னா குட்டி பதினாறடி பாய வேணாம். அவரு பொண்ணு, இவர விட தாராள குணம். அந்தப் பொண்ணு, அவங்க அம்மா பேருக்கு மாத்திடுச்சு சார்.
இந்த ப்ளாட்டொட மொத்த விலை வெறும் 1,28,23,900/- (ஒரு கோடியே இருபத்தியெட்டு லட்சத்து இருபத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் மட்டும்) தான் சார்.
இந்த கொஞ்சூண்டு காசைக் கூட மொத்தமா கொடுக்க முடியாத பரம ஏழை சார் நம்ப ஜாபர் சேட். நாலு தவணையில இன்ஸ்டால்மெண்டுலதான் சார் இந்தப் பணத்த கட்டியிருக்காரு. பாருங்க, செக் கொடுக்க வசதி இல்லாம எல்லாமே கேஷா கொடுத்திருக்காரு சார்.
14.10.2009ல ரூ.50,64,200
06.11.2009ல ரூ.25,00,000
07.11.2009ல ரூ.26,00,000
27.11.2009ல ரூ.26,59,700
இதக் கூட சில பண்ணாடைங்க, ஒரே மாசத்துல எப்படி 1.28 கோடி கட்ட முடியும். இது வருமானத்துக்கு அதிகமான சொத்து ஆகாதா ?
லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 13 (1) (e) ன் படி, 01.10.2009 முதல் 30.11.2009 வரை check period வைத்தால், disproportionate assets percentage 800 சதவிகிதத்தை தாண்டுமேன்னு சொல்றாங்க சார்.
இந்த கலி காலத்துல, பேராசை புடிச்ச இந்த உலகத்துல, ஏழைகளுக்காகவே வீடு கட்டி தர்றதுன்னு முடிவு பண்ணிட்டார் சார் நம்ப சேட்டு மாமா. ஆமா சார். நீங்கதான் எதச் சொன்னாலும் நம்ப மாட்டீங்களே.
தனியா வீடு கட்டுனா நல்லா இருக்காதுன்னு, கூடவே, நம்ப சிஎம் செக்ரட்ரி ராஜமாணிக்கம் இருக்கார்ல.. அவரு பையன் துர்கா சங்கர் கூட சேந்து, ஏழைகளுக்காகவே ஒரு அப்பார்ட் மென்ட் கட்டிட்டு இருக்கார் சார்.

எத்தனையோ ஏழை உழைப்பாளி மக்கள், சேரிகளிலும், கூவம் நதிக்கரை ஓரங்களிலும் வாழ்வதை கண்டு மனம் பொறுக்காமல், சகாய விலையில், மலிவாக தனக்கு கிடைத்த வீட்டு மனையில் ஏழைகளுக்காகவே வீடு கட்டித் தரப் போகிறார் என்றால், இவர் எவ்வளவு நல்லவர் ?
அந்த மனையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருப்பது, Landmark Constructions. நம்ப சேட்டு மாமாவோட அந்த ப்ராஜெக்டுக்கு Landmark Constructions வைத்திருக்கும் பெயர் Timberton. மொத்தம் 12 வீடுகள். இந்த 12 வீடுகளில் 4 வீடுகள் 1500 சதுர அடி. 8 வீடுகள் 1000 சதுர அடி. லிப்ட் வசதியெல்லாம் உண்டு சார்.

சவுக்கு, Landmark Construction கம்பெனிக்கு போன் செய்து கேட்ட போது, ஒரு சதுர அடி சென்னை நகரில் இவ்வளவு சல்லிசாக கிடைக்கிறது என்ற ஆச்சர்யம் மட்டுமல்ல, நம்ப சேட்டு மாமாவுக்கு, ஏழைகள் மீது இருக்கும் அக்கறையை நினைத்தால் புல்லரிக்கிறது சார். புல்லரிக்கிறது.

ஒரு சதுர அடியின் விலை வெறும் 8500 ரூபாய் சார். 2100 சதுர அடியில் 4 வீடுகள் மற்றும் 1500 சதுர அடியில் 8 வீடுகள் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் படி, நம்ப சேட்டு மாமாவுக்கும், ராஜமாணிக்கத்தின் மவனுக்கும் கிடைக்கப் போகும் தோராயமான தொகை 17 முதல் 20 கோடிகள்.

இதுல, நம்ப கர்ம வீரர் தனி ஆவர்த்தனம். பக்கத்துல, யார் கூடயும் சேராமல் தனியா கட்டிகிட்டு இருக்கார்.
நல்ல காரியத்த தள்ளிப் போடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல இப்போ பில்லர் வொர்க்கெல்லாம் ஏறக்குறைய முடிஞ்சுடுச்சு சார்.

So கூவம் நதிக்கரையோரம் இருக்கக் கூடிய ஏழை உழைப்பாளி மக்கள் ஒரே ஆண்டுக்குள், இந்த புதிய வீட்டில் குடியேறலாம். சமத்துவ புரம், குடிசை மாற்று வாரியம் எல்லாம் பிச்சை வாங்கணும் சார். என்னா ப்ளானு. என்னா ஸ்கீமு. பின்னிட்டார் இல்ல ?
இப்படிப் பட்ட நல்லவரப் போயி என்னா பேச்சு பேசறானுங்க… …. ?
இது மட்டும் இல்ல சார். வாயக் கட்டி, வயித்தக் கட்டி, கொஞ்ச கொஞ்சமா குருவி சேக்கற மாதிரி சேத்து வச்சு ஈசீஆர்ல தன்னோட நண்பர் ஜெய் சங்கர் என்பவர் பேர்ல ஒரு 2.5 க்ரவுண்ட் வாங்கிருக்கார் சார்.

இந்த க்ரவுண்டோட கைட்லைன் வேல்யூ, ரூ.1,07,50,000/- (ரூபாய் ஒரு கோடியே ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) இன்றைய சந்தை மதிப்பு மூன்று கோடி என்று சொல்றாங்க சார். இந்த ஜெய்சங்கரின் வீடு சென்னை அண்ணா நகரில் உள்ள ஜீவன் பீமா நகர்ல இருக்கு.

அங்க இவரப் பத்தி சவுக்கு விசாரிச்சப்ப, இவருக்கு ஒரு கோடி கொடுக்கவெல்லாம் துப்பு இல்ல, இவரு ஒரு டம்மி பீசுன்னு சொல்றாங்க சார். இந்த இடத்துல, நம்ப சென்னை கமிஷனர் ட்டி.ராஜேந்திரன் ஒரு 2.5 க்ரவுண்ட் வாங்கப் போறதாகவும் சொல்றாங்க சார். ஐஜியே வாங்கும் போது, ஏடிஜிபி வாங்கலன்னா அசிங்கம் இல்ல ?
சவுக்கு ஏற்கனவே, வாங்கிய மாமூலைப் எப்படி இன்வெஸ்ட் பண்றதுன்னு, லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பயிற்சி எடுக்கப் போயிருக்கிறார்கள்னு சொல்லியிருந்துச்சு ஞாபகம் இருக்கா. இந்த ட்டி.ராஜேந்திரன் இப்போ லண்டன்ல தான் இருக்கார். குருவி போல சேத்து வச்சு, ஒரு ரெண்டரை க்ரவுண்ட் எடம் வாங்குனா, அதக் கூட பொறாமைப் பிடிச்ச பசங்க தப்புத்தப்பா பேசறாங்க சார்.
நம்ப ஜாபர் சேட்டப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நம்ப சிஎம் மனச கலைக்க பல பண்ணாடைங்க ட்ரை பண்றாங்க சார். தெரியுமா உங்களுக்கு ? ஆனா நம்ப பாண்டியன் இருக்கும் போது இவர யாரு என்ன பண்ண முடியும் ? அது யாரு பாண்டியன்னு கேக்குறீங்களா ?
நம்ப சிஎம் பங்ஷனுக்கெல்லாம் போகும் போது, வாணலிய கவுத்து வச்ச மாதிரி ஒரு தலையோட, சபாரி சூட் போட்டுக்கிட்டு ஒருத்தர் வண்டிய தள்ளிகிட்டு வருவார் பாத்துருக்கீங்களா ? அவருதான் சார் பாண்டியன்.

சாதாரண காவலரா பணியில சேர்ந்த இந்தப் பாண்டியன், தன்னுடைய அண்டா கழுவும் திறமையால, இன்னைக்கு டிஎஸ்பியாக உயர்ந்திருக்கிறார் என்றால், அது காவல்துறைக்கே பெருமையில்லையா ? அவருதான் சார் நம்ப ஜாபர் சேட்டுக்கு பின்புலம்.
இந்தப் பாண்டியன் மட்டும் ஒண்ணும் லேசு பாசான ஆளு இல்ல சார். நம்ப சேட்டு மாமா ப்ளாட் வாங்கும் போது, இவரு சும்மா இருப்பாரா ? இவரும் இவரு பங்குக்கு, சென்னை முகப்பேர்ல ஒரே ஒரு ப்ளாட் வாங்கிருக்காரு சார்.
இந்த ப்ளாட்டோட மொத்த சதுர அடி 4756. இவரு உதவி ஆய்வாளராக இருந்தப்போ, ஒரு பணிஷ்மென்ட் இருந்தது. அதனால இவரு அப்பழுக்கற்ற அரசு ஊழியரா அலாட்மென்ட் வாங்க முடியல. அப்போ என்ன பண்றது ? சிம்பிள். சேட்டு மாமாவோட பொண்ணு சமூக சேவகர் ஆன மாதிரி, நம்ப பாண்டியனோட மனைவி மீனாவும் சமூக சேவகர் ஆயிட்டாங்க சார். இந்த ப்ளாட் எங்க இருக்கு தெரியுமா ?

முகப்பேர்ல பான்யன் அனாதை ஆசிரமம் இருக்குல்ல ? அதுக்கு அடுத்ததுக்கு அடுத்த ப்ளாட் தான் நம்ப பாண்டியன் சாரோடது.
இந்தப் பாண்டியன் சார் இருக்காரே…. இவரு நம்ப சிஎம்முக்கு ரொம்ப க்ளோஸ் சார்.
சேட்டு மாமாவப் பத்தி தப்பு தப்பா சில பண்ணாடைங்க சொல்லுதுல்ல.. இதை பத்தியெல்லாம் சிஎம்முக்கு வௌக்கி சொல்லுறது பாண்டியன் சார்தான். பாண்டியன் சார் வண்டி தள்ளிகிட்டு போறார்ல ? (ரிட்டயர் ஆனதும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில வண்டி தள்ற வேலை கேட்டிருக்கீங்களாமே ? உண்மையா சார் )
அந்த மாதிரி தள்ளிகிட்டுப் போகும் போது, “அய்யா நம்ப உளவுத்துறை ஐஜி ரொம்ப திறமை சாலி சார். அவரு மட்டும் இல்லண்ணா, இந்தப் பிரச்சினை ரொம்ப மோசமா போயிருக்கும் அய்யா.. ஐஜி தான் திறமையா வேலை செஞ்சு கவர்மெண்டுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துருக்கார்யா… ஐஜி அய்யா ரொம்ப நல்லவருய்யா… வல்லவருய்யா….. வில்லாதி வில்லருய்யா… வெங்கலப் ………. “ என்று தினந்தோரும் எடுத்துச் சொல்லி, நம்ப சேட்டு மாமா மீதான புகார் அம்புகளை மலர் அம்புகளாக மாற்றும் நற்பணியை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இவ்வளவு நல்லவரு மேலப் போயி, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக புகார் அளித்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்யா விட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெறவும், சில நாதாரிகள் கிளம்பியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் புகார் நிலுவையில் இருக்கும் நிலையில், இவர் தேர்தல் சமயத்தில் உளவுத்துறையில் இருக்கக் கூடாது என்று, தேர்தல் கமிஷனிடமும் புகார் அனுப்ப சிலர் கிளம்பியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜாபர் சேட் சார். நீங்க கவலையே படாதீங்க. உங்களுக்கு எந்த ஆபத்தும் வராம காப்பாத்தறதுக்கு சவுக்கு இருக்கு. ஆனா காலம் கலி காலமாயிடுச்சு சார். ஜாக்ரதையா இருங்க. என்ன ?
சவுக்கு















