Friday, June 4, 2010

நோயாளியான மருத்துவர் ? பாகம் ஒன்று




டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று ஆகியது.

யார் இந்த ராமாதாஸ் ? தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர்.

இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.

அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.

80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.




இவ்வாறு இவர்கள் இணைத்துக் கொண்ட வேளையில் தான், மருத்துவர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை, அந்த மிகப் பெரும் போராட்டம் தந்த பலத்தில் அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது, இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும், பேராசிரியர் கல்யாணி.

வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.

கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.

அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.

இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.



அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.

பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்தான ஒரு சூழல் அது.



அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை.

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.


ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.

அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியல“ என்று புலம்புவார் என்று கூறுகிறார்கள்.

இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.

இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.

இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை.

ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

“தேர்தல் பாதை திருடர் பாதை“ என்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது. 1989 ஆண்டு முதலே, பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு, ஒரு கணிசமான வெற்றியையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அரசியலும், அதன் சரிவும், இரண்டாம் பாகத்தில்.

சவுக்கு

9 comments:

  1. தமிலிச் பட்டை இல்லையா

    ReplyDelete
  2. நல்ல அலசல் சார்..
    ஒரு மனிதனை..அரசியல் எப்படி மிருகமாக்கி
    சீரழிக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..

    ”பழைய ராமாதாஸா இருந்திருந்தால்..நல்ல தலைவராக மிளிரியிருப்பார்”

    ReplyDelete
  3. மெட்ராஸ் மருத்துவர்கள் என்ராலே டுபாக்கூர் பசங்க என்று போலிருக்கிறது.பாருங்க ஒரு வழுக்கை மண்டை மருத்துவர்,ஜாதி வெறியர்,மரம் வெட்டுபவர்;இன்னொரு வெளை தாடி கிழட்டு வில்லன் மருத்துவன் நக்சல் பொறிக்கி.

    ReplyDelete
  4. தேர்தல் ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு, வெற்றியும் தோல்வியும் இயல்புதான். மேலும் ஒரேஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது தவிர, பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரிய வீழ்ச்சி எதுவும் இல்லை.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கடந்தகால தோல்வியுடன் ஒப்பிட்டால் - பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை.

    ReplyDelete
  5. இரண்டு கழகங்களும், பாமக வுக்கு- ஒரே ஒரு சீட்டு கொடுக்க கூட யோசிக்கும் போது, நீங்க பெருந்தன்மையோட சில இடுகைகள் ஒதுக்கியது பெரிய விஷயம். மற்றப்படி பாமகவும், பெருந்தலைவர்- கழகங்களை சொன்ன மாதிரி, "ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான்"... மனுஷனுக்கு பதவி ஆசை, பணத்தாசை எல்லாம் வரக்கூடாது. வந்துட்டா அசிங்கப்பட தயாரா இருக்கணும்.

    ReplyDelete
  6. வந்து விட்டான் வன்னிய ஜாதி வெறியன்,மரம் வெட்டியின் சொம்பு தூக்கி அருள்.

    ReplyDelete
  7. yen P.M.K vai paarthal ellarukkum erikirathu. ithu eppadi entral chee chee intha pazham pulikkum entra kathai mathirihtan.
    ella jaathi karankalum poltics pannanga. aana evanotathum inga pappu vegala. p.m.k mattum than still jaathi katchila periya levella irukkuthu. antha erichchal than vera onnum kidaiyaathu.
    karunanidhi, jayalalitha, vaiko, thiruma valvan, moopanar ellam pannatha arasiyaliya ivar pannittar.
    d.m.k , admk, congress katchi koodathan election kku election katchi maruthunga.
    ithila P.M.K mattum kurai solrathu yen.
    paakka pona north districts la DMK and ADMK M.L.A most of them are Vanniyar M.L.As thaan.

    inga vanniya ADMK, DMK, COngress katchila ellam irukkanga. ithayum meeri P.M.K has some amount of vote. appo ella vanniyarum P.M.K ke vote pottanganna enna aagum. north districts la ADMK, DMK illa congress entha kombanalum pudunga mudiyathu.

    ReplyDelete
  8. /// p.m.k mattum than still jaathi katchila periya levella irukkuthu.///

    neenga article full-a padichingala illaya..... aarambathulayae jathi-ya kaila edukkathathu thaan PMK innum uyiroda irukka kaaranam.... arambathulaye vettuvan kuththuvannu solli iruntha inneram PMK wikipedia-la mattum thaan irunthirukkum......

    ReplyDelete
  9. கடந்த கால வாக்கு உண்மைகளை மக்களிடம் மறைப்பதே அரசியல் பாதையின் கொள்கை. இதில் மருத்துவர் சரியாக தான் போகிறார்.

    ReplyDelete