Sunday, June 13, 2010

சவுக்கின் செம்மொழி விருதுகள்.


செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி குடும்பத்தை விட, அரசு இயந்திரமும், பரந்து பட்ட சமூகமும் கொடுத்திருக்கக் கூடிய உழைப்பு மெய் சிலிர்க்கச் செய்கிறது.

அரசு அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும், தமிழறிஞர்களும், காட்டும் ஆர்வமும், உணர்வும் பிரமிப்பூட்டுகின்றன.


இவர்களின் இந்த உழைப்பு இந்த கருணாநிதி குடும்ப மாநாட்டில் சரி வர கவுரவிக்கப் படாமல் போகப் போகிறதே என்ற அச்சமும் கவலையும் சவுக்குக்கு உண்டு.

அதனால், இந்தச் செம்மொழி மாநாட்டை ஒட்டி உழைத்தவர்கள், ஓடாகத் தேய்ந்தவர்கள் அனைவருக்கும் “செம்மொழி சொம்பு“ என்ற விருதை சவுக்கு வழங்குகிறது.



இந்த விருதுக்கு திமுகவைச் சேர்ந்தவர்களோ, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, தகுதி பெற மாட்டார்கள். இந்த விருதுக்காக பரிந்துரைப்பவர்களின் பட்டியல் மட்டும் இப்போது வெளியிடப் படுகிறது.

இந்த விருதைப் பெறப்போகிறவர்கள் யார் என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


சவுக்கின் வாசகர்கள் மேல் சவுக்குக்கு எப்போதுமே தீராத காதலும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் விருதுக்கான முதல் மூன்று இடங்களை வாசகர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

ரகசியமாக சவுக்கின் ஐபி அட்ரஸை கண்காணிக்கும் உளவுத் துறையினருக்கு இதில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

முதல் பரிந்துரை




மாவீரன் ராஜபக்ஷே. இவர் ஏன் முதல் பரிந்துரையாக வருகிறார் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், தமிழர்களை ஒடுக்கி, கொன்று கருணாநிதியின் மனதை குளிரச் செய்ததால்.

இப்போது, இலங்கையில் போர் உக்கிரமாக நடப்பதாக நினைத்துப் பாருங்களேன். செம்மொழி மாநாடு நடத்தாமல் இந்நேரம் கருணாநிதி கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டும், காஞ்சி ஜெயேந்திரரைப் போல, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடத்துபவர்களை ஆசிர்வதிக்க வேண்டும், இரண்டு மணி நேரம் உண்ணா விரதம் இருக்க வேண்டும், ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த வேலைகளேல்லாம் இல்லாமல் கச்சிதமாக ஒரு வருடத்திற்கு முன்பே காரியத்தை முடித்ததால், இவர்தான் முதல் பரிந்துரை.

இரண்டாவது பரிந்துரை




தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தனது தேர்ந்த எழுத்துக்கும், வளையான நேர்மைக்கும் சொந்தக் காரர் தான் இந்த வைத்தியநாதன்.

தினமணியின் கேப்ஷனாக நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று போட்டிருக்கிறதே, அது இவருக்கு நன்றாகவே பொருந்தும்.

அப்படிப் பட்டவர் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரின் தலையங்கங்களைப் படித்து கருணாநிதி இவரை திட்டாத கெட்ட வார்த்தைகளே இல்லை.

ஆனால், இவ்வாறு கருணாநிதி இவரைத் திட்டினார் என்று சொல்லும் போது, அதற்கான பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்ப்பார்.

பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன என்பதை உணர்ந்து சுவாசித்து வாழ்ந்து வருபவர்.

இப்படிப்பட்ட வைத்தியநாதன், ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் இருந்து அந்தர் பல்டி அடிக்கத் தொடங்கினார். தினமணியின் ஒரு தலையங்கத்தின் தலைப்பு “முதல்வர் மனது வைத்தால்“ என்று மேலவை அமையுங்கள் என்று மன்றாடுகிறார்.

மேலவை அறிவிப்பு வெளியானவுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானவுடன், மாநாட்டில் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்ற கெஞ்சல் தலையங்கங்கள்.

மறுநாளே கருணாநிதி இதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டவுடன், அதற்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். கருணாநிதியை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்ப் போல கேள்வி கேட்டு கட்டுரை எழுதும் சிறந்த கட்டுரை ஆசிரியர் பழ.கருப்பையாவின் கட்டுரைகள், 10 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் வரும்.

ஆனால், வைத்தியநாதனின் அந்தர் பல்டிக்கு பின்னால், பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். வாசகர்களின் தொடர்ந்த தொந்தரவினால், சமீபத்தில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்தன.

இது மட்டுமல்லாமல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு கவுன்ட் டவுன் போடுவது போல செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் 80 நாட்கள், 70 நாட்கள் என்று ஒரு தனி பத்தி. இதனால் அந்தர் பல்ட்டி அடித்த வைத்தியனாதன் இரண்டாவது பரிந்துரை.

மூன்றாவது பரிந்துரை




இந்தியன் எக்ஸ்பிரஸ் மெட்ரோ எடிட்டர் பாபு ஜெயக்குமார். ஆங்கிலப் பத்திரிக்கையின் மெட்ரோ எடிட்டராக இருந்தாலும், பாபு ஜெயக்குமாருக்கு இந்தச் செம்மொழி மாநாட்டில் இருக்கும் ஆர்வம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாதது.

தமிழ்நாடு அரசியலில் தன்னை நிபுணராக நினைத்துக் கொள்ளும் பாபு ஜெயக்குமார் அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எதிரான செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியானால், கருணாநிதி மனது நோகும் என்று அத்தனை செய்திகளையும் வெளியிடாமல் தடுப்பவர்.

கருணாநிதி பிறந்த நாளுக்கு, மூன்று பக்கங்களை ஒதுக்கி கருணாநிதியின் புகழ் பாடுபவர்.

செம்மொழி மாநாடு என்று சொல்லிக் கொண்டே யாராவது சிறுநீர் கழித்தால் கூட “செம்மொழி சிறுநீர்“ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிடுபவர்.

அதனால் இவர்தான் இவ்விருதுக்கான மூன்றாவது பரிந்துரை.


நான்காவது பரிந்துரை




தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பதே செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காகத் தான் என்பது போல இருக்கிறது இவர் செயல்பாடு.

இதற்காகத் தானே இவருக்கு பணி நீட்டிப்பு வேறு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் அலுவல் ரீதியான பணிகளை பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, கருணாநிதியின் குடும்ப நிகழ்ச்சியான செம்மொழி மாநாட்டு வேலைகளில் காட்டும் ஆர்வம் மிக மிக அதிகம்.

பெயர் என்னவோ ஸ்ரீபதி என்று இருந்தாலும், செம்மொழி மாநாட்டில் காட்டும் ஆர்வத்தை கணக்கில் கொள்ளும் போது, இவர் ஒரு தமிழாய்ந்த அறிஞர் என்றே அறியப் படுகிறார். எப்பொழுது பார்த்தாலும் ஒரு முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு, கருணாநிதியின் பின்னாலேயே அலையும் இவர்தான் செம்மொழி சொம்புக்கான நான்காவது பரிந்துரை.


ஐந்தாவது பரிந்துரை




ராதாகிருஷ்ண நாயுடு. இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஆனால் இவர் செம்மொழி மாநாட்டிற்கு ஆற்றிய பணிகள் மற்றவர்கள் அனைவரையும் விட அளப்பற்கரியது.

செங்கல்பட்டில் ஆ…. ஊன்னா உண்ணாவிரதம் இருக்கும், ஈழ அகதிகளை போலீசை விட்டு தடியடி நடத்தி ஒடுக்கிய லாவகம் என்ன, ஈழத் தமிழர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களை காவல்துறையை விட்டு அடித்த வேகம் என்ன, அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, வீடியோவில் அடித்தவர்கள் பதிவாகி இருந்தாலும், அவர்களை கைது செய்யாமல் அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்டு சிறைக்கு தள்ளும் அழகு என்ன, நாயுடுன்னா நாயுடுதான்.

இப்போது இவரின் பேச்சு, மூச்சு, சிந்தனை, உணவு அனைத்துமே செம்மொழி மாநாடுதான் என்று இவர் அருகில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

“அய்யா எப்பவுமே செம்மொழி மாநாட்டு வேலையில பிசியா இருக்காங்க“ “அய்யாவுக்கு டைமே இல்ல“ “அய்யா மத்யானம் லன்ச் கூட சாப்ட்றதில்ல. சிஎம், அய்யாகிட்டதான் எல்லா வேலையையும் ஒப்படைச்சிருக்காங்க. இந்த சீப் செக்ரட்ரி எந்த வேலையையும் செய்றதில்லன்னு அய்யா வருத்தப் பட்றாரு“ என்று அங்கலாய்கின்றனர்.

நாயுடுவும், அவ்வப்போது கோயம்பத்தூர் சென்று மாநாட்டுக்கான பாதுகாப்பு வேலைகளைச் செய்வதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதும் என்று பின்னி எடுக்கிறார். இதனால் ராதாகிருஷ்ண நாயுடுவே சவுக்கின் ஐந்தாவது பரிந்துரை.

ஆறாவது பரிந்துரை




இது மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர். இவர் பெயர் காமராஜ். பாப்புலராக நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படுவார்.

இவர் செய்யும் அளப்பரிய பணியானது சொல்லி மாளாது. கருணாநிதியின் கண்களும் காதுகளும் என்று இவரை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில், விலைவாசி விண்ணை முட்ட, அன்றாட வாழ்வை எப்படி நடத்துவது என்று மக்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்க, காவல் துறையால் கடும் நெருக்கடிக்கு சாதாரண மக்கள் கூட ஆளாகிக் கொண்டிருக்க, தமிழ்நாடு ஏதோ அமைதிப் பூங்காவாக இருப்பது போலவும், மாதம் மும்மாரி பெய்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து,

என்ன செய்வதென்று தெரியாமல், பாலியல் கதைகளை படிக்கும் சூழலில் இருப்பது போலவும் நக்கீரனில், கவர் ஸ்டோரிகளாக தொடர்ந்து இவன் அவள் கூட படுத்துக் கொண்டான், அவள் இவன் கூட படுத்துக் கொண்டான், இவன் இவள்களோடு படுத்துக் கொண்டான், எப்படி படுத்துக் கொண்டார்கள், எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டார்கள், படுத்துக் கொள்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு என்ன, என்பது போன்ற தத்ரூபமான பாலியல் கதைகளை வெளியிட்டு,

செம்மொழி மாநாட்டுக்கான சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இவரின் பலம்.

ஏழாவது பரிந்துரை




இவர் ஒரு பத்திரிக்கையாளர். பெயர் என்.ராம். இவரை இந்து ராம் என்று அழைப்பார்கள். ஏற்கனவே ஒரு முறை கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று பொருள் என்று சொன்னவுடன், பெரும் பிரச்சினையானது.

அதனால் இவரை இந்து ராம் என்று அழைத்தால், இந்துக்களை இழிவு படுத்துவதாகிவிடும் என்பதால் இவரை என்.ராம் என்றே அழைப்போம். புதிய சட்டமன்ற வளாகம் கட்டும் பணியை மேற்பார்வையிடும்போதும் சரி, கட்டி முடித்ததும் கட்டிட தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கும் போதும் சரி,

அவர்கள் ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடும் போது, உங்களுக்கு ஹிந்தி பாடல்கள் பிடிக்குமா என்று கருணாநிதியை கேட்டு, அதை பெரிய அளவில் இந்து பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிடுவதும் சரி, இந்த என் ராமின் பங்கு அளப்பறியது.

இந்து பத்திரிக்கையில் நாள்தோறும், செம்மொழி மாநாட்டு அரங்கில் பத்து எறும்புகள் வருகை தந்திருக்கின்றன, மாநாட்டு அரங்கை ஈக்கள் மொய்க்கின்றன, மாநாட்டு பந்தலை நாய்கள் நக்குகின்றன என்று செய்தி வெளியிட்டு, தமிழுக்கும் செம்மொழி மாநாட்டுக்கும் இவர் புரியும் சேவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால் இவர் சவுக்கின்
ஏழாவது பரிந்துரை.



எட்டாவது பரிந்துரை




லத்திக்கா சரண். காவல்துறையில் ஒரு “டம்மி பீஸு“ வேண்டும் என்று, இவரை சீனியரையெல்லாம் ஓரங்கட்டி விட்டு டிஜிபியாக ஆக்கினாலும், இவரும் தன் பங்குக்கு, செம்மொழி மாநாட்டுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியே வருகிறார்.

டிஜிபியாக பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் செங்கல்பட்டில் அகதிகள் முகாமில் மிருகத்தனமாக தடியடி நடந்தது. அன்றே இவர் தடியடியே நடக்கவில்லை, உள்நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அரசியல்வாதி போல அறிக்கை வெளியிட்டார்.

என்னதான் இருந்தாலும் நான்தான் டிஜிபி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று அவ்வப் போது, கோயம்பத்தூர் சென்று, செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது போல பாவ்லா காட்டுவதன் மூலம், இவரும் இந்த விருதுக்கு தகுதி பெறுகிறார்.

சீனியரை ஓரங்கட்டி விட்டு, தனக்கு ப்ரமோஷன் கொடுத்தற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக கருணாநிதிக்கு சொம்படிப்பதன் மூலம், இவர் நாமினேஷன் சிறப்பு வாய்ந்தது.

இது தவிர, டிஜிபி பதவியை இழந்த ஆர்.நட்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டிவிஷன் பென்ச், நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அளவுக்கு “உள்குத்து அரசியல்“ செய்தததால், இவர் பொருத்தமானவர் தான்.

ஒன்பதாவது பரிந்துரை




தொல்.திருமாவளவன். ராஜபக்ஷேவை ஒழிப்பேன். பிரபாகரனை காப்பேன். காங்கிரஸ் கட்சிதான் என் முதல் எதிரி என்று ஊர் முழுக்க முழக்கம் செய்து விட்டு, காலை நக்கும் பொமரெனியன் நாய்க்குட்டி போல, கருணாநிதியை சுற்றி வருபவர்.

இலங்கை பிரச்சினையில் தமிழ் மக்கள் கருணாநிதி மீது கோபமடையும் போதெல்லாம் ஒரு போராட்டம் நடத்தி, கருணாநிதி மீதான கோபத்தை தணியச் செய்பவர்.

தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்று தள்ளு வண்டியில் டெல்லி பயணம் செய்யத் தெரிந்த கருணாநிதிக்கு, தனக்கு ஒரு இணையமைச்சர் பதவி கூட பெற்றுத் தர முயலவில்லையே என்று மான ரோஷமெல்லாம் இல்லாமல், திருவல்லிக்கேணி திமுக வட்டச் செயலாளரை விட, நான்தான் நன்றாக சொம்படிப்பேன் என்று சொல்லாமல் செய்தும் காட்டுபவர்.

இலங்கைக்கு போய் ராஜபக்ஷேவை சந்திப்பாராம், ஆனால் ராஜபக்ஷே இந்தியா வந்தால் சந்திக்க மாட்டாராம். இது போல, கருணாநிதியை விஞ்சும் அளவுக்கு நாடகம் போடுபவர். இதனால் கருணாநிதி பொருத்தமாகவே இவரை மாநாட்டின் ஆலோசனைக் குழு உறுப்பினராக போட்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் இவருக்கே விருதுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்தக் கணிப்பு தெரிவிக்கிறது.

பத்தாவது பரிந்துரை



பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தமிழ்நாட்டின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தவர். சிறந்த பேச்சாளர். சிறந்த சிந்தனையாளர் என்று அறியப்பட்டவர். சிறந்த உணர்வாளர் என்றும் சொல்வார்கள். ஆனால் இவர் எப்போதுமே ஒரு டம்மி பீஸாகத்தான் இருந்திருக்கிறார் என்று விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு முறை இவர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த போது, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கையில் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்வர். இவருடன் இருந்த இசுலாமிய கைதிகள், இவ்வாறு கைவிலங்கு போடுவது, சட்டவிரோதம், நாம் இதற்காக போராட்டம் நடத்துவோம். அதில் நாம் தாக்கப் பட்டாலும் சரி என்று பேசுகின்றனர். இதற்கு சம்மதித்த சுப.வீரபாண்டியன், கைவிலங்கு போடுவதை எதிர்த்த இசுலாமிய கைதிகள் போலீசிடம் அடி பட்டு ரத்தம் ஒழுக காயம் பட்டுக் கிடக்கையில் சத்தம் போடாமல் கைவிலங்கு போட்டு போலீசோடு சென்றார் என்று கூறுகிறார்கள்.

தமிழ் என் மூச்சு, தமிழ் என் சுவாசம், தமிழ் என் உணர்வு என்று ஓவராக நெஞ்சை நக்குவார். ஆனால் ஈழத் தமிழர் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தார். இவர் சிறப்பாக காலை நக்குகிறார் என்பதை அறிந்துதான் கருணாநிதி இவரை பொது அரங்க நிகழ்ச்சிக் குழு உறுப்பினராக போட்டிருக்கிறார். இதனால் இவர்தான் சவுக்கின் பத்தாவது பரிந்துரை.


சவுக்கு

9 comments:

  1. சுந்தரராஜன்June 13, 2010 at 12:58 AM

    விருதுப்பட்டியலில் முக்கியமான ஒரு பெயர் விடுபட்டுள்ளது. அது...:

    திருவாளர் தமிழன்!

    நாட்டில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் தானுன்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார். தனது வீடடில் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்தாலும் சத்தம் போட்டு அழுவது அநாகரிகம் என்று கருதி மவுனத்திலேயே துக்கத்தை தொலைத்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல இருப்பார்.

    சினிமாவிலும், கிரிக்கெட்டிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு நிஜமான உலகின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சிப்பார்.

    தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளரை செருப்பால் அடிப்பதற்கு பதில் அவர்தரும் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டு, தனது உரிமைகளை மொத்த விலைக்கு விற்பனை செய்வார்.

    ReplyDelete
  2. அன்பரே, உங்கள் பரிந்துரையோடு ஏறத்தாழ முழுமையாகவே உடன்படுகிறேன். கருத்தியல் ரீதியாக உங்களுடன் சில விஷயங்களில் முரண்பட்டாலும், நாணயமின்மை உங்களை எவ்வளவு சுடுகிறது என்பதே என்னை நெகிழவைக்கிறது. ஒரே ஒரு திருத்தம். ஜெயகுமார் பாவம் அய்யா. நாங்களெல்லாம் சம்பள அடிமைகள். அந்நிறுவனத்தைப் பற்றி பல சொல்லவேண்டும். சொல்கிறேன்.

    ReplyDelete
  3. நக்கீரன் காமராஜ்-க்கு நான் பரிந்துரை செய்கிறேன்.... :-P :-)

    ReplyDelete
  4. kandippaga rajapakse dhaan yenadhu thervu.....

    ReplyDelete
  5. //செம்மொழி மாநாட்டு அரங்கில் பத்து எறும்புகள் வருகை தந்திருக்கின்றன, மாநாட்டு அரங்கை ஈக்கள் மொய்க்கின்றன, மாநாட்டு பந்தலை நாய்கள் நக்குகின்றன//

    செம குசும்பு அய்யா உமக்கு! :)

    ReplyDelete
  6. செம்மொழி மாநாட்டு கீதமிங்கே, தமிழ் மரபெங்கே?
    mediapaarvai.wordpress.com

    ReplyDelete
  7. Good Article.I FW to many of friends in Gulf

    ReplyDelete
  8. முதலாவது இடத்தை ராஜபக்சேவுக்கு அளிப்பதைவிட திருமாவுக்கும், சுபவீக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

    இவர்கள் இருவரில் ஒருவரைக்கூட இரண்டாமிடத்துக்கு தள்ளிவிட முடியாதபடி, இவர்களது துரோகங்கள் பக்கபலமாக இருக்கின்றன.

    ReplyDelete
  9. //முதலாவது இடத்தை ராஜபக்சேவுக்கு அளிப்பதைவிட திருமாவுக்கும், சுபவீக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

    இவர்கள் இருவரில் ஒருவரைக்கூட இரண்டாமிடத்துக்கு தள்ளிவிட முடியாதபடி, இவர்களது துரோகங்கள் பக்கபலமாக இருக்கின்றன.
    //
    I agree with this.

    ReplyDelete